சென்னை: பெங்களூரு செல்லும் ரயில்கள் அரக்கோணம் – ஜோலார்பேட்டை இடையே செல்லும் போது அவற்றின் வேகத்தை 130கி.மீ. வரை அதிகரித்து கொள்ள ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரயில்கள் 4.30 மணி நேரத்தில் சென்றடைகின்றன. சதாப்தி மற்றும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 5.30 முதல் 6 மணி நேரத்தில் பெங்களூருவை அடைகின்றன. இவற்றின் பயண நேரத்தை சுமார் 25 நிமிடங்கள் குறைப்பதற்காக அரக்கோணம் முதல் ஜோலார்பேட்டை வரையிலான 144 கி.மீ. தூரத்திற்கு சிக்னல்கள் மற்றும் தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே இதே வேகத்தில் ரயில்களை இயக்க சென்னை முதல் அரக்கோணம் வரையில் தண்டவாளம் மற்றும் சிக்னல் மேம்பாடு பணிகள் முடிந்து விட்டன. அரக்கோணம் முதல் ஜோலார்பேட்டைக்கு இடையே வழக்கமாக 110 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில்கள் அடுத்த வாரம் முதல் 130 கி.மீ வேகத்தில் செல்ல உள்ளன. இதனை பயணிகள் வரவேற்றுள்ளனர். பொதுவாக ஐ.சி.எப். தயாரிக்கும் பெட்டிகளை அதிகபட்சமாக 110கி.மீ. வேகத்தில் இயக்கலாம். ஆனால், பெரும்பாலான ரயில்களில் எல்.ஹச்.பி. எனப்படும் நவீன பெட்டிகள் பொறுத்தப்பட்டுள்ளதால் இவற்றை 130 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். 124 ரயில்களில் இந்த வேக அதிகரிப்பால் இனி கோவை, திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, மங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு அரைமணி நேரத்திற்கு முன்பே சென்றடைய முடியும்.
The post இனி பெங்களூருக்கு 4 மணி நேரத்தில் செல்லலாம்: அடுத்தவாரம் முதல் 130 கி.மீ வேகத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே அனுமதி..!! appeared first on Dinakaran.